Lok Sabha Election 2024: விசிகவுக்கு ‘செம’ வாய்ப்பு.. திருமா கணக்கு இதுதானா?

Advertisements

சென்னை: 2 தொகுதிகளிலும் ஒரே தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் விசிக மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெறும் வாய்ப்புள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மாநில கட்சி அங்கீகாரத்தை இழந்துள்ள நிலையில், விசிக தமிழ்நாட்டில் 3வது கட்சியாக மாநில கட்சி அங்கீகாரத்தைப் பெறக்கூடும். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தை வைத்து அந்தக் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்குகிறது. குறிப்பாகத் தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கட்சியை நடத்த வேண்டும். மக்களவையில் மொத்தம் உள்ள இடங்களில் இரண்டு சதவீத இடங்களைப் பெற்று இருக்கும் கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெறும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.

மாநில கட்சி அங்கீகாரம் பெற விதிமுறை: அதே போல மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற சட்டப்பேரவை தேர்தலில் ஆறு சதவீத வாக்குகளைப் பெற்று 2 சட்டசபை தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும் அல்லது மொத்தமுள்ள தொகுதிகளில் 3 சதவிகித தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, மக்களவை தேர்தலில் ஆறு சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது 25 இடங்களுக்கு 1 எம்.பி சீட்டை வென்றிருக்க வேண்டும். அப்படி எங்குமே வெற்றி பெறாவிட்டாலும் 8 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.

தேமுதிக இழந்தது: கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே தனித்துப் போட்டியிட்ட தேமுதிக சட்டப்பேரவைத் தேர்தலில் 8.38% வாக்குகளைப் பெற்று முத்திரை பதித்தது. அதற்கு அடுத்து 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 10.3% வாக்குகளைப் பெற்றது. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 7.88% வாக்குகளைப் பெற்றது. அப்போது, தேமுதிகவில் 29 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்கள் ஆகினர். ஆனால், அதன் பிறகு 3 தொடர்ச்சியான தேர்தல்களில் ஒரு எம்.பி. அல்லது ஒரு எம்.எல்.ஏ.வைக் கூடத் தேமுதிக பெறவில்லை. தொடர்ந்து 3 முறையாக 3 சதவீதத்திற்கும் குறைவாக வாக்குகளைப் பெற்றது தேமுதிக. இதனால் அதன் மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

ஷாக் பாமகவும் இல்லை: தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளாகத் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளே உள்ளன. தமிழகத்தில் மாநில கட்சிகளாக உள்ள பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை ஏற்கனவே இழந்துள்ளன. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 8 சதவீத வாக்குகளுக்கும் குறைவாகப் பெற்று வரும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இன்னும் மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தையே பெறவில்லை.

விசிகவுக்கு வாய்ப்பு: இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தல்மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற வாய்ப்பு அமைந்துள்ளது. விசிகவுக்கு திமுக கூட்டணியில் 2 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த 2 தொகுதிகளிலும் ஒரே தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றால் மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெறும். 25 சீட்களுக்கு 1 சீட் வெல்ல வேண்டும், அதன்படி தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற லோக்சபா தேர்தலில் ஒரு கட்சி 2 சீட்களில் வென்றிருக்க வேண்டும். விசிக இந்த முறை தனிச் சின்னத்தில் 2 தொகுதிகளில் வென்றால் திமுக, அதிமுகவுக்கு அடுத்து 3வது கட்சியாக மாநில கட்சியாக இருக்கும்.

திருமா கணக்கு: அதையொட்டியே கணக்குப் போட்டு, விசிக தனிச் சின்னத்தில் களமிறங்க உள்ளதாகத் தெரிகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் விசிகவுக்கு 2 சீட் ஒதுக்கப்பட்ட போதிலும், விழுப்புரத்தில் விசிக சார்பில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். சிதம்பரத்தில் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். இதனால், இரண்டிலும் வென்றாலும் தேர்தல் ஆணைய விதிப்படி, மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *