Lok Sabha Election 2024 – EPS: வீட்டுக்காக உழைப்பவர்கள் தி.மு.க… எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

Advertisements

தி.மு.க. வீட்டு மக்களுக்காக உழைக்கிற கட்சி, அ.தி.மு.க. நாட்டு மக்களுக்காக உழைக்கிற கட்சி என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

நெல்லை டவுண் வாகையடி முக்கில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தி.மு.க. கார்ப்பரேட்: அப்போது பேசிய அவர், “தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க..வுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. எளிதில் அணுகக் கூடியவன் நான். அ.தி.மு.க. ஜனநாயக அமைப்புள்ள கட்சி. அதனால் தான் நான் இங்குப் பெரிய பதவி பெற்று இருக்கிறேன். இது வேற எந்தக் கட்சியிலும் கிடையாது. முதல்வர் ஸ்டாலினுக்கு உழைப்பு பற்றித் தெரியாது. ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். திமுக வீட்டு மக்களுக்காக உழைக்கும் கட்சி. அதிமுக நாட்டு மக்களுக்காக உழைக்கும் கட்சி.  திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி.

திமுகவின் குடும்பத்தினர் அனைவரும் அந்தக் கம்பெனியில் உறுப்பினராக உள்ளனர். திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது. திமுகவின் வேட்பாளர்கள் அனைவரும் வாரிசுகள் அல்லது கோடீஸ்வரர்களாகத் தான் உள்ளனர். அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட வேட்பாளராகப் போட்டியிட முடியும். அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது ஸ்டாலினால் அதிமுகவை தொட்டு கூடப் பார்க்க முடியாது.

பயப்படமாட்டோம்: அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆட்சி மீண்டும் தலை தூக்கி விட்டால் இந்த நாட்டை ஆண்டவனால் கூடக் காப்பாற்ற முடியாது. மன்னர் பரம்பரையா? இந்த நாடு ஜனநாயக நாடு இது. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூடப் பொதுச் செயலாளராகலாம். இது திமுகவில் நடக்காது. முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்கு தொடர்ந்தால் அதிமுக பயந்து விடும் எனத் தமிழக முதலமைச்சர் நினைக்கிறார். உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் நாங்கள் பயந்தது கிடையாது. அதிமுகவில் அனைவரும் மண்வெட்டி பிடித்தவர்கள். யாருக்கும் பயப்படுவார்கள் அல்ல. வழக்குப் பதிவு செய்துவிட்டால் அதிமுகவை அழித்து விடலாமென ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். வீட்டுக்குள் இருந்து கொண்டு எதுவும் தெரியாத திறனற்ற முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.

சிவாஜி நடிப்பை மிஞ்சிய ஸ்டாலின்: ஒரு காலத்தில் மன்னர்கள் வீட்டிலிருந்து கொண்டு நாட்டில் நடப்பதை அமைச்சர்களிடம் விசாரிப்பார்கள். அதேபோல் வீட்டிலிருந்து கொண்டு அமைச்சர்களிடம் நாட்டில் நடப்பது குறித்து முதலமைச்சர் விசாரித்துக் கொண்டிருக்கிறார். எங்கள் கூட்டணியை ஸ்டாலின் கள்ளக் கூட்டணியெனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் வைத்துள்ளது தான் கள்ளக் கூட்டணி. பிரதமரோடு சிரித்து சிரித்து பேசிவிட்டு எங்களைக் கள்ளக் கூட்டணியெனச் சொல்லும் ஸ்டாலின் நடிப்பில் சிவாஜி கணேசனையே மிஞ்சி விட்டார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருந்து கொண்டு எதனைப் பற்றிப் பேச வேண்டும் எனத் தெரியாமல் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். சிரித்து பேசினால் பல் தான் தெரியும். வேர்காவில் உள்ளவர்கள் வீரணையாகப் பார்க்கும்போது பாஜகவினரிடம் சரணாகதி அடைந்து கொண்டிருக்கின்றனர். அதிமுக யாருக்கும் அஞ்சும் கட்சி அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல. பாஜகவை விட்டு நாங்கள் விலகி வந்து விட்டோம். எங்களைக் கொச்சைப்படுத்தி மக்கள் இடம் பேசி விட்டால் வெற்றி பெற்று விடலாமெனப் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எதைப் பேசினாலும் சிரித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமியென நினைக்கக் கூடாது நான் எப்படிப்பட்டவன் எனத் தெரியாது. கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். நாட்டில் உதவாக்கரை முதலமைச்சர் என்றால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினாகத்தான் உள்ளார்.

மூன்றாண்டு காலமாகத் தமிழகத்தை குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து மாணவர்கள் இளைஞர்கள் போதை பொருள்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழக இளைஞர்கள் சீரழிவதற்கு திமுக ஆட்சி தான் காரணம். போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுடன் கைகோர்த்து தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இருந்து கொண்டிருக்கின்றனர். இதைக் கேட்டால் வேறு வேறு காரணங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஸ்டாலின் இதற்கெல்லாம் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை எதிர்த்துப் பேச முடியுமா என மேடைக்கு மேடை ஸ்டாலின் கேட்டு வருகிறார்.

22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். நாங்கள் ரியலாக எதையும் செய்கிறோம். எதை எதிர்க்க வேண்டுமோ அதைக் கண்டிப்பாக எதிர்ப்போம், எதை ஆதரிக்க வேண்டுமோ அதை ஆதரிப்போம். இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் காவேரி பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தை 22 நாட்கள் ஒத்தி வைத்தோம்.

ஆனால் நீட் பற்றிப் பேசும் முதலமைச்சர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கத் திராணி இருக்கிறதா? திமுகவின் உறுப்பினர் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தான் நீட் கொண்டுவரப்பட்டது. ஆனால் நீட்டை ஒழிப்போம் என ஸ்டாலின் நாடகம் போடுகிறார். நீட்டை ஒழிக்க ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் சொன்னார். ஆனால் அந்த ரகசியம் என்ன என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. நீட்டுக்கு எதிராகப் பல லட்சம் கையெழுத்தை பெற்று சேலம் இளைஞர் அணி மாநாட்டில் காற்றில் பறக்க விட்டதுதான் மிச்சம்” என அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *