Lok Sabha Election 2024: நாடு முழுவதும் 102 தொகுதிகளில் 8 மணி நேரத்தில் 49.78% வாக்குப்பதிவு!

Advertisements

டெல்லி: நாடு முழுவதும் நடைபெறும் மக்களவை முதற்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளிலும் மாலை 3 மணி நிலவரப்படி 49.78 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. 2024 மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்டங்களையும் விட அதிகப்பட்சமான தொகுதிகளை முதல் கட்டம் கொண்டுள்ளது.

தொகுதி பிரேக் அப்: தமிழகம் (39), ராஜஸ்தான் (12), உத்தரப் பிரதேசம் (8), மத்தியப் பிரதேசம் (6), உத்தராகண்ட் (5), அருணாச்சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் அண்ட் நிகோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), அசாம் (5), மகராஷ்டிரா (5), பிஹார் (4), மேற்குவங்கம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), ஜம்மு காஷ்மீர் (1), சத்தீஸ்கர் (1) தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

49.78 சதவீதம் வாக்குப்பதிவு: இந்த 102 தொகுதிகளிலும் மாலை 3 மணி நிலவரப்படி 49.78 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது, தமிழகத்தில் 51%, ராஜஸ்தானில் 41.5%, உத்தரப் பிரதேசத்தில் 47.4 சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் 53.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரையில் அருணாச்சலப் பிரதேசத்தில் 54.3 சதவீதமும், சிக்கிம் மாநிலத்தில் 52.7 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இலக்கு 400! – இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். கடந்த 2019 தேர்தலில் பாஜக கூட்டணி 353 தொகுதிகளைக் கைப்பற்றியது. இது அதற்கு முந்தைய 2014 தேர்தலில் கிடைக்கப்பெற்ற 303 சீட்களை ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும். அதேபோல் இந்தத் தேர்தலில் அதிக சீட்களைக் கைப்பற்றி 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

மணிப்பூர், மேற்கு வங்கத்தில் வன்முறை: மக்களவை முதற்கட்டத் தேர்தல் பெரும்பாலும் அமைதியாகவே நடந்து வருகிறது. மணிப்பூர், மேற்கு வங்கத்தில் மட்டும் சிறிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. மணிப்பூர் மாநிலத்தின் மொய்ராங் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் பல முறை துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அதேபோல் பிஷ்ணுபூர் தொகுதியில் வாக்குச்சாவடி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சேதப்படுத்தினர்.

மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் இன்று 3 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரியென 3 தொகுதிகளிலும் 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தத் தொகுதிகளில் (ஏப்.19) இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே, பல வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் – பாஜக ஆதரவாளர்களிடையே மோதல்கள் வெடித்தன. இவைதவிர வேறு பெரிய பதற்றமான சம்பவங்கள் அரங்கேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *