
புதுடெல்லி:நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் சூழுரைத்து வருகிறார்கள்.
இந்த நம்பிக்கையில் மேலும் ஒரு படி மேலே சென்று பிரதமர் மோடியின் உத்தரவுபடி புதிய ஆட்சி அமைந்ததும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்பற்றி அமைச்சரவை செயலாளர்கள் இப்போதே ஆலோசனையில் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.
பாஜக தலைமையிலான அரசின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டங்கள்குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் மட்டத்தில் உயர்மட்ட அதிகாரிகள் குழு மோடிஅரசின் அறிவுறுத்தலின் கீழ் ஆலோசித்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சர்கள் எண்ணிக்கை
அதன்படி, தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால், மத்திய அரசு நிர்வாகத்தில் தற்போதுள்ள அமைச்சரவைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து ஆட்சித்திறனை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 54 அமைச்சரவைகள் செயல்பாட்டில் உள்ள நிலையில், சீனா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில், குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சரவைகளைக் கொண்டு அந்நாட்டு அரசு நிர்வாகங்கள் இயங்கி வருவதைப்போலவே, இந்தியாவிலும் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதற்கு ஆலோசனை நடைபெற்றது.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை 20% அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும், உள்கட்டமைப்பில் தனியார் பங்களிப்பை அதிகளவில் ஈடுபடுத்திட முக்கியமாக அரசு முனைப்பு காட்டுவதாகவும், 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்துறை பங்களிப்பை 28 சதவிகிதத்திலிருந்து 32.5 சதவிகிதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும், புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான காலக்கெடு 18 நாள்களிலிருந்து 10 நாள்களாகக் குறைக்கப்பட வேண்டும் என்பதுடன் பாதுகாப்புத்துறை உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிக அளவில் ஊக்குவிக்க அரசு முனைப்பு காட்டுவதாகவும் தெரிய வந்துள்ளது.நிலுவை வழக்குகள்
2030-ஆம் ஆண்டுக்குள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை 5 கோடியிலிருந்து 1 கோடிக்கும் கீழ் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும், இவையனைத்தும் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களில் ஆலோசிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வூதியர்கள் அதிகரிப்பு
மேலும், வாகனச் சந்தையில் மின்சார வாகனங்கள் விற்பனையை 7 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமக அதிகரிக்க இலக்கு, வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு 37 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக அதிகரிக்க இலக்கு, ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் விகிதத்தை 22 சத்விகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும், இவை குறித்தும் கேபினெட் செயலாளர் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆட்சி அமைத்த நூறு நாட்கள் அதைத் தொடர்ந்து ஒரு ஆண்டு அடுத்து ஐந்து ஆண்டுகள் எனத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 2030 ஆம் ஆண்டின் அதிகபட்சம் 2047 ஆம் ஆண்டையும் இலக்காக வைத்துத் திட்டங்கள் தீட்டப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

