
இந்திய அணியின் 3வது வரிசையில் விராட் கோலிக்கு பதிலாகச் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் எனக் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியுள்ளார்.
உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள், அணிகளின் ஆடும் லெவனில் இடம் பெறக்கூடிய வீரர்கள்குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா இந்திய அணியின் 3வது வரிசையில் விராட் கோலிக்கு பதிலாகச் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, நீங்கள் விரும்புவீர்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய ஒரு ஆலோசனை என்னவெனில் சூர்யகுமார் 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். அவர் டி20 கிரிக்கெட்டில் மகத்தான வீரர்களில் ஒருவர். விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களிடம் பேசும்போது அவர் முன்கூட்டியே களத்தில் விளையாடுவதை விரும்புவதாகச் சொல்வார்.
சூர்யகுமார் விஷயத்திலும் நானும் அதையே உணர்கிறேன். அவரை முடிந்தளவுக்கு முன்கூட்டியே களமிறக்க முயற்சிக்க வேண்டும். அவர் துவக்க வீரர் கிடையாது. எனவே முன்கூட்டியே களமிறங்கி 10 – 15 ஓவர்கள்வரை அவர் பேட்டிங் செய்தால் போட்டி எப்படி மாறும் என்பது உங்களுக்குத் தெரியும்.
நீங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் கொஞ்சம் முன்கூட்டியே களமிறங்கினால் அவர் உங்களை அசைக்க முடியாத நிலைக்கு எடுத்துச் செல்வார். அது மற்றவர்கள் தங்களுடைய இடத்தில் சிறப்பாக விளையாடுவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும். எனவே அவரை 3வது இடத்தில் விளையாட வைப்பதற்கான வழியைக் கண்டறியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


