
கும்பகோணம் மாசிமக விழாவை ஓட்டித் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின்போது நாடு முழுவதும் இருந்து மகாமகம் குளத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதே போன்று கும்பகோணத்தில் நடைபெறும் மாசிமகம் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. மாசி மாத பவுர்ணமியும் மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய தினம் மாசி மகம் என அழைக்கப்படுகிறது/ இந்த நாள் சிவபெருமானுக்கு மற்றும் பெருமாளுக்கு உகந்த நாளாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நாளில் காசிக்கு இணையான கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராடினால் செய்த பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்நிலையில், இந்த ஆண்டு மாசி மகம் பிப்ரவரி 24ம் நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் என்பதால் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜெக்கப் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசியகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள வாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு 24.02.2024 (சனிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

