Krishnasamy : மாஞ்சோலை தேயிலை தோட்டத்தைத் தமிழக அரசே நடத்த வேண்டும்!

Advertisements

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் செயல்பட்டு வந்த தனியார் தேயிலைத்தோட்ட நிறுவனத்தின் ஒப்பந்த காலம் 2028ம் ஆண்டோடு நிறைவு பெறுகிறது. ஆனாலும், தனியார் நிறுவனம் தேயிலைத் தோட்டத்தில் முதலீடு செய்வதை காட்டிலும் பிற துறைகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இதனால், ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டு அதன் பணியாளர்களிடம் கட்டாய விருப்ப ஓய்வுக்கு வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியைச் சந்தித்து முறையிட்டபோதிலும் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இந்நிலையில், கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள்குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தேயிலை தோட்ட தொழிலார்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி, இருப்பிடத்தை விட்டுக் காலி செய்யத் திட்டமிட்டு வருகின்றனர்.

பிபிடிசி நிறுவன ஒப்பந்தம் 2028ம் ஆண்டு முடிவடைவதாகக் கூறி விருப்ப ஓய்வு கடிதத்தை வாங்கி வருகிறார்கள். தொழிலாளர்களின் அத்தியாவசிய தேவைகளைத் துண்டித்து வருகின்றனர். தொழிலாளர் சட்டவிரோத செயல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதல்வர் கவனத்திற்கு கடிதம் எழுதி உள்ளேன். அரசியல் கட்சியினர் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டுத் தொழிலாளர்களின் நலனைக் காக்க வேண்டும். தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தாலும், தமிழக தேயிலை தோட்ட கழகமே இதனை எடுத்து நடத்த வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்ட தொடரில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனவும் இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்குக் கடிதம்மூலம் வலியுறுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *