
தாலியை கழற்றி தருவதாக உணர்ச்சி வசப்பட்ட திமுக நகர் மன்ற உறுப்பினர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க என் தாலி செயினை கூட கழற்றி தர தயாராக இருப்பதா உணர்ச்சி வசப்பட்டு பேசிய திமுக நகர் மன்ற உறுப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலையில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தினசரி சந்தை கடைகள் இடித்த போது அதில் பழுதடைந்த பொருட்கள் ஏலம் விடுவது தொடர்பாகவும், நகராட்சிக்குட்பட்ட கட்டணக் கழிப்பிடம் டெண்டர் விடுவது, நகராட்சியோடு 7 ஊராட்சி இணைத்து விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் 14 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக இனாம் மணியாச்சி, மூப்பன்பட்டி , இலுப்பையூரணி திட்டங்குளம் , பாண்டவர்மங்கலம் மந்திதோப்பு,நாலட்டின் புதூர் உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சி உடன் இணைக்க திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், கோரிக்கைகள் குறித்து, எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் பேசிய 22வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி தனது வார்டில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். போதிய நிதி இல்லாத காரணத்தால் அப்பணி தொய்வடைந்து உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிதி இல்லையென்றால் எனது வார்டு மக்களுக்காக என் தாலி செயினை கூட கழற்றி தர தயாராக இருக்கிறேன். என் மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என ஆவேசமாக பேசினார்.
உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்று தவறுதலாக பேசக்கூடாது, சாலை மற்றும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் கருணாநிதி கூறினார்.

