
சூரியின் ‘கொட்டுக்காளி’ டிரைலர் வெளியீட்டில், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், வினோத்ராஜை பாராட்டிப் பேசியதுடன், தனுஷை மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், படக்குழுவை பாராட்டிப் பேசியதோடு, தனுஷை தாக்கிப் பேசியதாகச் சர்ச்சையும் எழுந்துள்ளது. அதைப் பற்றிப் பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் பேசியதாவது : கூழாங்கல் படத்திற்காக ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் வினோத் ராஜ் விருது வாங்கி இருப்பதாகச் சொன்னார்கள். அது என்னன்னு விசாரிச்சப்போ தான் தெரிஞ்சது, கிறிஸ்டோபர் நோலன் மாதிரியான ஜாம்பவான் வாங்கிய விருதை வினோத்ராஜ் வாங்கி இருக்கிறார் என்று, அதைக்கேட்டு ஷாக்காகி நான் அப்படியே வினோத்தை பார்த்தேன். எந்த ஊருன்னு கேட்டேன். அண்ணேன் மதுர தான்னு சொன்னார்.
கிறிஸ்டோபர் நோலன் வாங்குன விருதை நம்மூர் பையன் வாங்கிருக்கான் ஏன் இது வெளிய தெரியலனு தோணுச்சு. உடனே அவரோட அடுத்த படத்தை நான் தயாரிக்க முடிவு செய்து, கதையே கேட்காமல் நான் என்ன படமா இருந்தாலும் பண்றேன்னு சொல்லிக் கமிட் பண்ணுன படம் தான் கொட்டுக்காளி. கதைக்காகப் படம் பண்றதை தாண்டி. இப்படி ஒருவரை கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் படம் பண்ண சம்மதித்தேன்.
இந்தப் படத்தில் நான் என்ன முதலீடு செய்திருக்கிறேனோ, அதுபோக எனக்கு இந்தப் படத்தின் மூலம் லாபம் வந்தால், அந்தத் தொகையை முதலில் வினோத்ராஜிடம் கொடுத்து அவரது அடுத்த படக் கால்ஷீட்டை வாங்கிவிடுவேன். அதையும் தாண்டி லாபம் கிடைத்தால் வினோத் ராஜ் மாதிரி வேறுசில இயக்குனர்கள் இருக்கிறார்களா எனத் தேடி கண்டுபிடிப்பேன்.
எஸ்.கே.புரொடக்ஷன்ஸ்ல இருந்து இன்னும் நிறைய படைப்புகள் வரும். நான் யாரையும் கண்டுபிடிச்சு, இவங்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன், இவரை நான் தான் ரெடி பண்ணேன் அப்படிலாம் நான் சொல்லமாட்டேன். என்னைய அப்படி சொல்லிச் சொல்லிப் பழக்கிட்டாங்க. அந்த மாதிரி ஆள் நான் இல்ல. ஒரு நண்பனை அறிமுகப்படுத்துவது போலத் தான் இதுவும். கொட்டுக்காளி படம் வெற்றியடைந்தால் இந்தமாதிரி முயற்சிகள் மீண்டும் தொடரும் எனச் சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.
நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் எனச் சிவகார்த்திகேயன் இந்த விழாவில் அழுத்தமாகச் சொன்னது தனுஷை தானென நெட்டிசன்கள் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். தனுஷ் தான் சிவகார்த்திகேயனை தனது 3 படம்மூலம் அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமின்றி தன்னுடைய தயாரிப்பில் சிவகார்த்திகேயனை நாயகனாக நடிக்கவும் வைத்தார். அவர் பல இடங்களில் சொன்னதை விமர்சித்துத் தான் சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி விழாவில் பேசி இருப்பதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.


