
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் ஜெயின் சமூகத்தினர் நடத்திய விழாவில் மேடை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் இன்று ஜெயின் சமூகத்தினர் சார்பில் ஆன்மிக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரரான பகவான் ஆதிநாதரை போற்றும் வகையில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
Nirvana Laddu parv கொண்டாட்டம் என்பது நடந்தது. இதில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர். லட்டு என்பது பிரசாதமாக வழங்கப்பட்டது.
அப்போது திடீரென்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மரத்தால் ஆன மேடை சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் பலியாகினர்.
மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதுபற்றி அறிந்ததும், போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
இருப்பினும் ஒரு வழியாகப் போலீசார், மீட்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்குச் சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி அறிந்தவுடன் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று அவர் வேண்டிக் கொண்டார்.
பாக்பத் கலெக்டர் அஷ்மிதா லால் மற்றும் எஸ்பி அர்பித் விஜயவர்கியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதுபற்றிக் கலெக்டர் அஷ்மிதா லால் கூறுகையில், ‛‛முதற்கட்ட விசாரணையில் மரத்தாலான மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 40 பேர்வரை காயமடைந்துள்ளனர். அவர்களில் 20 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளனர்.
இன்னும் 20 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் யாராவது காயமடைந்துள்ளனரா? என்பது பற்றி விசாரித்து வருகிறோம்” என்றார்.
கலெக்டர் இப்படி கூறும் நிலையில் விழாவில் 50 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
