
கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற பிரான்சில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவியைக் காணவில்லை…
புதுச்சேரி: புதுவை ரெட்டியார் பாளையம் தேவாநகரை சேர்ந்தவர் அமிர்தமுருகன் புஷ்கரன். இவரது மனைவி லலிதா (வயது 50). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களான இவர்களுக்கு விக்னேஷ்வரி (29), காவ்யா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர். காவ்யா பிரான்சில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
இதில் மூத்த மகள் விக்னேஷ்வரிக்கு கடந்த மாதம் புதுவையில் திருமணம் நடந்தது. இந்தத் திருமண நிகழ்ச்சிக்காகக் காவ்யா புதுவைக்கு வந்திருந்தார். தொடர்ந்து பெற்றோருடன் இருந்து வந்தார். இந்த நிலையில் காவ்யா கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து காவ்யாவின் தாய் லலிதா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரில் காவ்யாவை அரும்பார்த்தபுரம் தக்ககுட்டையை சேர்ந்த அஜித் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரான்ஸ் மருத்துவ கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


