Kerala Fishermen Arrest: 80 கேரள மீனவர்கள் சிறைபிடிப்பு!

தூத்துக்குடி: கேரளத்தைச் சேர்ந்த 80 மீனவர்களை நடுக்கடலில் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர்.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நாள்தோறும் அதிகாலை புறப்படும் விசைப்படகுகள் கடலில் மீன்பிடித்து விட்டு இரவு 9 மணிக்குள் கரைக்கு திரும்பிவிடும். கடந்த சில மாதங்களாக விசைப்படகுகள் கரை திரும்பியதும் கேரள மீனவர்கள் அத்துமீறித் தமிழக பகுதியில் நுழைந்து இரவில் மீன்பிடிப்பதாகத் தூத்துக்குடி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் காலைக் கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு மீன் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். கேரள மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க வலியுறுத்தித் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து செல்லும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கு உடனடியாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில், கேரளத்தைச் சேர்ந்த 80 மீனவர்களை நடுக்கடலில் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர். கேரள மாநில படகு, குளச்சலை சேர்ந்த 5 படகுகளையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர். 80 மீனவர்கள், படகுகளைத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்குக் கொண்டு வந்தனர். நடுக்கடலில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *