
கரூர் துயரத்தில் மறைந்திருக்கும் உண்மையை சிபிஐ வெளிக்கொண்டு வரும் என்று மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் முருகன் இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்தார். அதன்பின் சங்குமாலில் அரசு விருந்தினர் மாளிகையில், இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்களைச் சந்தித்தார்.
அப்போது இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் முருகன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதியளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முருகன், திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வழியாக மதுரை வரை இயக்கப்பட்டு வந்த அமிர்தா விரைவு ரயில் அக்டோபர் 17ஆம் நாள் முதல் இராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையை முடித்து உண்மையை வெளிக் கொண்டு வரும் என்று கூறிய முருகன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைவாரா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளிக்காமல் கடந்து சென்றார்.


