
கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ள அரசியல் தலைவர்கள், கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்துடன் நேற்றுத் துபாய்க்குச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி, கரூர்த் துயரத்தை அறிந்ததும் பயணத்தைப் பாதியில் ரத்துச் செய்துவிட்டு விமானத்தில் திருச்சிக்குத் திரும்பினார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டுக் கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அமைச்சர்கள் சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தங்கள் அன்புக்குரியோரின் இழப்பைத் தாங்காமல் அங்குக் கூடியிருந்த உறவினர்களைச் சந்தித்து உதயநிதி ஆறுதல் கூறினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு உயிரிழந்தோரின் உடல்களுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினரைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.


