
சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குறைந்தால் டீக்கடை வைப்பேன் என்று நடிகை பார்வதி கூறினார்.
சென்னை:தமிழில் ‘பூ’ படம்மூலம் கதாநாயகியாக அறிமுகமான பார்வதி, தொடர்ந்து கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’, தனுஷ் ஜோடியாக ‘மரியான்’, ‘சென்னையில் ஒருநாள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் ஜோடியாக ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் பார்வதி அளித்துள்ள பேட்டியில், ”நான் ‘பூ’ படத்தில் நடித்தபோது எனக்குச் சரியாகத் தமிழ் தெரியாது. ஆனாலும் கதாபாத்திரத்துக்காக மற்றவரைத் தமிழில் படிக்க வைத்துக் கேட்டேன். எனக்குச் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குறைந்தால் டீக்கடை வைப்பேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தொழில் செய்ய ஆர்வம் இருந்தது. குறிப்பாக டீக்கடை திறக்க ஆசைப்பட்டேன்.
எந்தத் தொழில் செய்தாலும் அதில் மரியாதை முக்கியம். மரியாதை குறைவு ஏற்பட்டால் அதில் நீடிக்க முடியாது. சினிமா துறையிலும் மரியாதை வேண்டும். அது கிடைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகி விடுவேன்” என்றார்.

