
பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட காளையார்கோயிலில்!
சொர்ணகாளீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க பகுதியை, பாண்டியர்களும் பிறகு சிவகங்கை மன்னர்களும் ஆட்சி செய்தார். இக்கோயிலை தேவக்கோட்டை ஜமீன் குடும்பத்தாரின் அறகட்டளை நிர்வகித்து வருகிறது.
சங்க காலத்தில், இந்த இடம் கானப்பேர் என்று அழைக்கப்பட்டது. இதற்கான சான்று, புறநானூற்றில், 21ஆம் பாடலில் ஐயூர் மூலங்கிழார், சங்க கால கவிஞ்ர், குறிப்பிட்டுள்ளார். 9 ஆம் நூற்றாண்டில் சுந்தர மூர்த்தி நாயனார், இக்கோயிலிள்ள் மூலவரை காளை என்று விவரித்துப் பாடினார். அன்று முதல், இத்திருக்கோயில் காளையார்கோயில் என்று அழைக்கப்பட்டது.

பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவரும், அம்பாளும் மட்டுமே இருப்பர். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னதிகள் உள்ளன. அம்பாளுக்கு தனி சன்னதி கிடையாது.ஆனால், இத்தலத்தில் மூன்று இறைவனும், மூன்று இறைவியும் எழுந்தருளுகின்றனர்.சொர்ணகாளீஸ்வரர் – சொர்ணவல்லி, சோமேசர் – சவுந்தரநாயகி, சுந்தரேசுவரர் – மீனாட்சி, இதில் தேவாரப் பதிகம் பெற்றவர் சொர்ணகாளீஸ்வரர்ஆகிய தெய்வங்களும் இத்திருத்தலத்தில் அமரப் பெற்றுள்ளனர்.

காளையார் கோயில் தெப்பக்குளம் என்றும் ஆனைமடு குளம் என்றும் அழைக்கப்படும், இக்குளம் பல நூறு ஆண்டுக்கு முன்பு வெட்டப்பட்டது.1900கள் தொடக்கத்தில் தேவகோட்டை ஜமீன்தார் அள. அரு. இராம. அருணாச்சலம் செட்டியார், இக்குளத்தை சதுர வடிவமாகச் சீர்படுத்தி கல்திருப்பணி செய்து, மேலும் அழகுற மதுரை வண்டியூர் தெப்பக்குளம் நீராழி மண்டபத்தை ஒத்து, இக்குளத்தின் நடுவே அற்புதமான நீராழி மண்டபம் ஒன்றை அமைத்துள்ளார்.

பலநூறு ஆண்டுகட்கு முன் பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற இக்கோயில், பின்னர் பலராலும் திருப்பணிகள் செய்யப்பெற்றும் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது. பாண்டியனால் கட்டப்பட்ட 5 நிலைகளைக் கொண்ட 90அடி உயர ராஜ கோபுரமும் அதன் அருகே 18ஆம் நூற்றாண்டில் மருது சகோதரர்களால் கட்டப்பட்ட 9 நிலைகளைக் கொண்ட 155 1/2அடி உயர இராஜகோபுரமும் உள்ளன.
இத்தலத்தில் உள்ள சுந்தரேசுவரர் – மீனாட்சி கோயில், நூறுகால் மண்டபம் நீங்கலாக ஏனைய சோமேசர்-சவுந்தரநாயகி கோவில், சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி கோவில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் மறுகட்டுமானம் செய்யப்பட்டும், புதிதாக மண்டபங்களும் சுற்று பிரகாரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.1800கள் மத்தியில் தொடங்கி 1900கள் தொடக்கம் வரை நகரத்தார் திருப்பணிகள் நடந்துள்ளது.

வரலாறு:
காளையார்கோயில், சங்கக் காலங்களிலிருந்து மன்னர்களின் கோட்டையாகவே செயல்ப்பட்டது. சுதந்திர போரட்ட வீரர்களாகிய முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் மற்றும் மருது சகோதரர்களின் கோட்டையாகவும் திகழ்ந்தது.
25 ஜூன் 1772, ஆங்கிலேயப் படைகள், கர்னல். ஜோசப் ஸ்மிட் மற்றும் கேப்டன். போஜூர் தலைமையில் காளையார் கோயிலை நோக்கி அணிவகுத்தனர். சிவகங்கையின் இரண்டாவது ராஜா, முத்துவடுகநாத தேவர் (1750–1772) மற்றும் மருது சகோதரர்கள் அவர்களை எதிர்த்துக் கோயிலைப் பாதுகாக்க முயன்றனர். இதில் ராஜா முத்துவடுகநாத தேவர் ம்ற்றும் பல வீரர்கள் உயிர்மாண்டனர். படையெடுத்த ஆங்கிலேயர்கள் 50,000 பகோடா மதிப்புள்ள் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருவிழாக்கள்:
காலீஸ்வரர் திருவிழா, தை மாதம் கொண்டாடப்படுகிறது. ‘பூசம்’ அன்று, தேர் இழுக்கப்படும். ‘சோமேஸ்வரர் பிரமோட்சவம்’ வைகாசி மாதத்தில் நடக்கும்.
அமைவிடம்:
சென்னை-இராமேஸ்வரம் அல்லது திருச்சி-மானாமதுரை இருப்புப்பாதையில் சிவகங்கை தொடருந்து நிலையத்தின் அருகில் உள்ள காளையார்கோயிலில் உள்ளது. சிவகங்கை நகரத்திலிருந்து கிழக்கே 20 கி.மீத்தொலைவில் உள்ளது.


