
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் அவர் உயர்கல்வித்துறை அமைச்சராகதான் பதவி வகித்தார்.
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு, போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கடந்த 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையே இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கில் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பின்படி பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் விடுதலை செய்த சிறப்பு கோர்ட்டு தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவே அப்போது வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில் எம்எல்ஏ மற்றும் மைசார் பதவியை இழந்தார் பொன்முடி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்தித்து பேசி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்தித்தார் பொன்முடி. தீர்ப்பு குறித்தும் அடுத்த நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


