
J&K Martyr Soldiers: ஜம்முவில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. இதில் துப்பாக்கி சூட்டின்போது 2 ராணுவ கேப்டன்கள் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாஜிமால் பகுதியில் தீவிரவாதிகள் 2 பேர் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்பு படை வீரர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர்.
பாஜிமால் பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது, திடீரென ராணுவ வீரர்கள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தத் துப்பாக்கி சூட்டில் 2 கேப்டன்கள் உள்பட 4 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். ஒரு மேஜர் மற்றும் ஒரு வீரர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
என்கவுன்டர் நடந்த குலாப்கார்க் வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பிடிக்கும் பணி நீடித்து வருகின்றது. அந்த இடத்தில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை முறியடிக்கக் கூடுதல் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
எனவே அந்தப் பகுதி மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மூடப்பட்டுள்ளது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாஜிமாலில் சுற்றித்திரிந்த அவர்கள் வெளிநாட்டினர் என்றும், ஞாயிற்றுக்கிழமை முதல் அப்பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும் ராணுவத்திடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



