
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகச் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு குறு நடுத்தத் தொழில்கள் துறையின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்காக உள்ளதாகத் தெரிவித்தார். உற்பத்தித் துறையில் 36 விழுக்காடு பங்கையும், மொத்த ஏற்றுமதியில் 46 விழுக்காடு பங்கையும் இத்துறை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் வலிமை அதன் ஏற்றுமதி அளவை வைத்தே கணக்கிடப்படும் நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான முதுகெலும்பாக சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் திகழ்வதாக ஜிதன் ராம் மாஞ்சி புகழாரம் சூட்டினார்.
தொழில்துறையினர் சந்தித்து வரும் சவால்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், அலுமினியம், செம்பு உள்ளிட்ட உலோகங்களின் விலை உயர்வு தற்காலிகமானதுதான் என்றும், விரைவில் நிலைமை சீராகிப் பழைய விலை நிலவரம் திரும்பும் என்றும் தெரிவித்தார்.


