
தைபே:தைவானில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.5 ஆகப் பதிவாகி உள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் விடுத்த சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜப்பான் தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கின.
தைவான் தலைநகர் தைபேவை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இன்று காலை 9:3.4 மணிக்கு (டோக்கியோ நேரம்) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் இது 7.5ஆக பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாகப் பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதில், ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து, தைவான், ஜப்பான், பிலிப்பின்ஸ் நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர் (9.8 அடி) வரை சுனாமி ஏற்படும் என்று ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் கணித்து இருந்தது.
சுனாமி அலைகள்தாக்கின!
இந்த எச்சரிக்கை தொடர்பு தைவான் அருகில் உள்ள மியா கோஜிமா, யோனா குகி உள்ளிட்ட தொலைதூர ஜப்பானிய தீவுகளில் சுனாமி அலைகள் மூன்று மீட்டர் உயரத்துக்கு எழும்பித் தாக்கத் தொடங்கியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கை விடப்பட்டது.
வலுவான நிலநடுக்கம் காரணமாகத் தைபே நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பானின் ஒகினாவாவின் தெற்கு மாகாணத்திற்கு அருகில் உள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தைவானின் கிழக்கு நகரமான ஹுவிலில் கட்டிடங்கள் அசைந்தது குறித்த வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. தைபேயில் சுரங்கப்பாதை சேவையும், தீவு முழுவதும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
தைவானின் பூகம்ப கண்காணிப்பு நிறுவனம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் 7.5 ஆகவும் தெரிவித்துள்ளது. பூமிக்கு கீழே சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜப்பானின் தெற்கு ஜப்பானிய தீவுக் குழுவான ஒகினாவாவிற்கு 3 மீட்டர் (9.8 அடி) வரை சுனாமி ஏற்படும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
25 ஆண்டுகளாக இல்லாத அளவில்!
தைவானின் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் “25 ஆண்டுகளில் இல்லாத வலிமையானது” என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தைவான் நிலநடுக்கத்தை அடுத்து, பிலிப்பின்ஸ் நாடு, சுனாமி குறித்து எச்சரித்ததுடன், கடலோரப் பகுதிகளைக் காலி செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது.
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பானின் தெற்குப் பகுதியான ஒகினாவாவில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் புதன்கிழமை விமானங்கள் நிறுத்தப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், தைவானில் பெரும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அச்சுறுத்தல் “இப்போது கடந்துவிட்டது” என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

