
மயிலாடுதுறையில் பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியரைப் போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த அரசுப் பள்ளி ஆசிரியரைப் போக்சோ சட்டத்தில் கைது செய்து, காவல்துறை சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கண்ணாரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் என்பவரது மகன் ஐயப்பன். இவருக்கு வயது 35.
அறிவியல் பட்டதாரி ஆசிரியரான இவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி ஒன்றில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். திருமணம் ஆகாத இவர், மயிலாடுதுறையில் தங்கி பள்ளி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் பணிபுரியும் அதே பள்ளியில் 12 -ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியும் ஒருவரும் அவரது டியூஷன் சென்டரில் படித்தித்து வந்துள்ளார். கடந்த மாதம் அந்த மாணவியைத் தான் டியூஷன் சென்றுக்கு அழைத்துச் சென்று, அங்குச் சென்றதும் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் தொடர்ந்து இதே போலப் பல முறை அந்த மாணவியை அங்கு அழைத்துச் சென்று தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அந்த மாணவிக்குச் சற்று உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் சந்தேகப்பட்ட பெற்றோர், மாணவியிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த மாணவி தன்னிடம் ஆசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை அழைத்துச்சென்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் நாகவல்லி மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையினர் பள்ளி ஆசிரியர் ஐயப்பனை கைது செய்து நாகப்பட்டினத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் அவரை நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர் பள்ளியில் பயிலும் மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த ஆசிரியர் வேறு மாணவிகளிடம் இது போன்று நடந்துக் கொண்டாரா எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

