Iyermalai Ratnachaleswarar Temple: “மாணிக்கக் கற்களைப் பெற மன்னனை சோதனை செய்த இறைவன்!

Advertisements

“மாணிக்கக் கற்களைப் பெற மன்னனை சோதனை செய்த இறைவன்! அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் மலை உச்சியில் சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்தச் சிவஸ்தலம் ஆனது 1017 படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இத்திருக்கோவிலில் இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிவன் சுயம்புவாகக் காட்சி அளிக்கின்றார். இங்குக் காட்சியளிக்கும் சிவபெருமான் இரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சை, சிவப்பு போன்ற கற்கள் நிறைய கிடைக்கின்றன. 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் மேலுள்ள மலையின் மீது சிவபெருமான் சுயம்புவாக அருள்பாவிக்கின்றார். சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு நேரே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. ரத்தினங்களின் எண்ணிக்கை 9. அதாவது நவரத்தினம் என்போம்.


இந்த அய்யர் மலையில் உள்ள சிறப்புகள் எல்லாம் 9ஐ குறிப்பதால் இங்குள்ள சிவன் ரத்தினகிரீஸ்வரர் என்று பெயர் பெற்றாரா, அல்லது ரத்தினகிரீஸ்வரர் என்று சிவன் பெயர் பெற்றதால் இங்குள்ள சிறப்புகள் எல்லாம் ஒன்பது என்ற கணக்கில் அமைந்ததா என்பதை சிந்தித்துப் பார்த்தால், அதற்கான பதில் இல்லை. இம்மலையில் உள்ள பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை. இந்த மலை தற்போது மக்கள் பேச்சு வழக்கில் அய்யர்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. முதலில் காலையில் காவிரிக்கரையில் வீற்றிருக்கும் கடம்பரை தரிசித்து விட்டு, இரண்டாவதாக நடுப்பகலில் இரத்தினகிரீஸ்வரர் தரிசித்து வணங்கி, மூன்றாவதாக மாலையில் திரு ஈங்கோய்மலை நாதரையும் ஒரே நாளில் தரிசித்தால் நல்ல பலன் என்பது ஐதீகம்.


தல வரலாறு:

இந்தக் கோவிலில் சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டிக்கு ஒரு சிறப்பு வரலாறும் உள்ளது. அதைப் பற்றிக் காண்போம். ஆரிய மன்னன் ஒருவன் மாணிக்கக் கற்கள் வேண்டி இறைவனிடம் வந்தான். “மாணிக்கக் கற்களை நீ பெற வேண்டுமென்றால் இந்தத் தொட்டியைக் காவிரி நீரால் நிரப்ப வேண்டும்” என்று ஒரு தொட்டியை இறைவன், அரசனிடம் காண்பித்தார். அந்தத் தொட்டியில் எவ்வளவு தான் நீரினை ஊற்றினாலும் நிரம்பவில்லை. இதனால் கோபமடைந்த மன்னன் அவனது வாளை எடுத்து இறைவனிடத்தில் வீசினான். அந்தச் சமயம் இறைவன் மாணிக்கக் கற்களை மன்னனுக்கு தந்து அருள் பாவித்தார்.


இறைவனை காயப்படுத்தியதில் வருத்தமடைந்த மன்னன், அந்தக் கோவிலிலேயே இறைவனுக்கு சேவை செய்து முக்தி பெற்றான் என்கிறது வரலாறு. அந்த மன்னனால், இறைவன் வெட்டு பட்டதால், இத்தளத்தில் சிவனுக்கு ‘முடித்தழும்பர்’ எனும் பெயரும் உண்டு. இன்றளவும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இந்த வடு காணப்படுகிறது. சிவலிங்கத்தின் முன்பு அந்த மன்னனால் நிரப்பப்படாத தொட்டி தற்போதும் பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டியாக இருக்கின்றது. சிவனுக்கு நாள்தோறும் அருகில் உள்ள காவிரியிலிருந்து 10 குடம் நீர் கொண்டு வரப்பட்டு, அந்தத் தொட்டியில் நிரப்பி, காவிரி நீரால் உச்சிப்பொழுதில் அபிஷேகம் செய்யப்படுகிறது.


பலன்கள் குலதெய்வம் தெரியாதவர்கள் இரத்தினகிரீஸ்வரர் குலதெய்வமாக வழிபடலாம். திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, தொழிலில் முன்னேற்றம் அடைய இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் உண்டு. இதுதவிர மூட்டு வலி, இதய நோய், ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்தக் கோவிலின் மலையை ஒருமுறை ஏறி வந்தால் மாற்றத்தை உணர முடியும் என்று கூறுகின்றனர். தரிசன நேரம்: காலை 6AM-11 மணிவரை மாலை 4PM- 8 மணிவரை தரிசனம் செய்யலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *