
ஜெகத்ரட்சகனிற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.
சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அக்கார்டிற்கு சென்ற அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பூந்தமல்லியில் உள்ள சவீதா கல்லூரியிலும், ஆவடி அருகே இருக்கும் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீட்டிலும், சோதனை நடைபெற்று வருகிறது. இதே போன்று குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனை, பாரத் பல்கலைக்கழகம், மதுபான ஆலை, மாமல்லபுரம் பகுதிகளிலும் அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து வருகிறது.
பள்ளிக்கரணை பாலாஜி மருத்துவமனை, புதுச்சேரியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில், ஜெகத்ரட்சகன் ரூ.600 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாகக் குறி கூறி ரூ.22 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தங்கம், ரூ.500 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகள், வீடு, சொத்துகளின் ஆவணங்களும் வரிமான வரித்துறை சோதனையில் சிக்கின.
ஐடி ரெய்டு மட்டுமில்லாமல் ஜெகத்ரட்சகனிற்கு சொந்தமான இரு மருத்துவ கல்லூரிகள்மீதும் சிபிஐ விசாரணை நடத்த அனுமதிபெறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 2020ம் ஆண்டு சட்டவிரோத பணிபரிமாற்றம் தொடர்பாக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார்கள் எழுந்தன. அதனால், அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதுமட்டும் இல்லாமல், சட்டவிரோதமாக வெளிநாட்டில் முதலீடு செய்த குற்றச்சாட்டில் எம்பி ஜெகத்ரட்சகனிற்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டது.


