
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு வரிசையில் நின்ற சிறார்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பேரழிவு ஏற்பட்டுப் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பின்றிப் பொதுஇடங்களில் குடிசைகளை அமைத்துத் தங்கி வருகின்றனர். இந்நிலையில் வியாழனன்று காசாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 66 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தெயிர் அல் பாலா என்னுமிடத்தில் அல் அக்சா மருத்துவமனையில் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு வரிசையில் நின்றவர்களின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்கியதில் எட்டுக் குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த மருத்துவமனையை அமெரிக்காவின் உதவியைப் பெற்ற புராஜக்ட் ஹோப் குழுமம் நடத்தி வருகிறது.


