
வாஷிங்டன்: இஸ்ரேல் மீது ஈரான் இன்று(அக்.,01) இரவு 400க்கும் மேற்பட்டஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ருல்லா மற்றும் ஜெனரல் அப்பாஸ் நில்பாருஷான் ஆகியோரின் மரணத்திற்கு பழிவாங்கவே இந்தத் தாக்குதலைத் தொடங்கியதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஏவுகணை தாக்குதலில் 30 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்கிட அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டார். இஸ்ரேல் தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தெரிவித்துள்ளது. ஏறக்குறைய ஒரு கோடி இஸ்ரேலிய மக்கள் ஈரானின் ஏவுகணை தாக்குதல் இலக்கில் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஈரான் போர் நிலைமைகுறித்து அதிபர் ஜோபைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஈரான் தலைமை மதகுரு அதயதுல்ல கொமேனி தான் ஏவுகணை தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பாதுகாப்பான ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே ஈரான் ஏவுகணையைத் தடுத்திட ,இஸ்ரேல் ராணுவத்திற்கு உதவிட வேண்டும் என அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.இது குறிதது அவர் வெளியிட்டுள்ள அறிவி்ப்பில், ஈரானின் ஏவுகணை தாக்குதல் திட்டத்தை முறியடிப்போம். இஸ்ரேலுக்கு வேண்டிய உதவிவிடுவோம் என்றார்.
இதற்கிடையே இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ளவர்கள் வெளியேறுமாறும், தேவையின்றி இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இந்திய தூதரகம் இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்காக உதவி எண்கள் +972-547520711, +972-543278392; மற்றும் மின்னஞ்சல் முகவரி cons1.telaviv@mea.gov.in ஆகியவற்றை அறிவித்துள்ளது.
லெபனானில் உள்ள போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என இஸ்ரேலும் அமெரிக்காவும் எச்சரித்துள்ளன.
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஏவுகணையை ஏவினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். மேலும் இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க கப்பல்களும் விமானங்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி எச்சரித்துள்ளார்.

