Israel – Hamas War: ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும்!

ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தெற்கு, மத்திய காசாவில் இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்திவருகிறது.

அல்பாலா: காசாவின் சில பகுதிகளிலிருந்து இஸ்ரேல் ராணுவம் வௌியேற உள்ளதாகக் கூறியுள்ள நிலையில், தெற்கு, மத்திய காசாவில் பயங்கர தாக்குதலை நடத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்குமிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் 88 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது.

இந்தப் போரில் பெண்கள், குழந்தைகள் உள்பட இதுவரை 21,978 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர். 56,690க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 85 சதவீதத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் வீடுகளை விட்டு வௌியேறி விட்டனர். வரும் வாரங்களில் காசாவில் உள்ள சில ராணுவத்தினர் வௌியேறுவார்கள் என இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

சிலர் ஓய்வு எடுக்கவும், ஒருசிலர் குடும்பத்தினரை சந்திக்கவும், மேலும் சிலர் மேலதிக போர் பயிற்சிகளை மேற்கொள்ளவும் உள்ளதால் சில ஆயிரம் ராணுவத்தினர் வௌியேற உள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர், மத்திய காசாவின் ஜபாலியா ஆகிய இடங்களில் இஸ்ரேல் வான், தரை வழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளது.

இதில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழுகை நடத்தும் இடம் சின்னாபின்னமாகி விட்டது. நீடிக்கும் போர் தொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஈரானின் தூண்டுதலால் ஹிஸ்புல்லாக்கள், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலை நிறுத்தா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்” என்று எச்சரித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *