காஸா இனப் படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்.!

Advertisements

சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காஸாவில் நடைபெறும் இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக போரை   நிறுத்தக் கோரியும் சென்னை எழும்பூரில் 8- 10 – 2025 அன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்து உரையாற்றுகையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ள நாம் மட்டுமல்ல, மனித நேய சிந்தனை கொண்ட ஒவ்வொரு மனிதரும் காஸாவில் நடந்து கொண்டிருக்கும் இனப் படுகொலையை கண்டித்து கொண்டிருக்கிறோம்.

பாலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனிதாபிமான, மனித உரிமையை, அதனுடைய ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகிறோம். இதுதான் இந்த கண்டன முழக்கத்தின் அடிப்படை. கடந்த ஓராண்டாகவே காஸாவில் இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றன.

இதுவரை 11,000 பெண்கள், 17,000 குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள், 125 ஐ.நா ஊழியர்கள் என 50,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 26,000 குழந்தைகள் பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் ஓராண்டில் காஸாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக காஸா மக்கள் தொடர்ந்து போராடி கொண்டு தான் இருக்கின்றனர்.

அங்கு நடைபெறும் கொடுமைகளுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில், கடந்த ஜூன் மாதம் பட்டினியால் வாடக்கூடிய பாலஸ்தீனியர்கள் உணவு பொருட்கள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்து காத்திருபோது 45 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

உணவிற்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை பார்த்து அனைவரது உள்ளமும் நொறுங்கி போய்விட்டது. மனித உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படும் இத்தகைய கொடுமைகளை கண்டிக்காமல் செல்ல யாருக்காவது மனம் ஒப்புமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

சில நாட்களுக்கு முன்பு மற்றுமொரு செய்தி வந்தது. காஸாவில் மரணத்தின் விளிம்பில் தவித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள், குழந்தைகளுக்கான பால் பவுடர்கள் ஆகியவற்றை எடுத்து சென்ற 45 நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்களை தடுத்து இஸ்ரேல் கைது செய்துள்ளது. இதையெல்லாம் கண்டிக்காமல் இருக்க முடியுமா? காஸாவில் நடைபெறும் இரக்கமற்ற இனப் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் இந்த கூட்டத்தின் முதன்மையான கோரிக்கை. மத்திய பாஜக அரசு தலையிட்டு இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, காஸா மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை வேண்டும்.

ஐ.நா சபை உள்ளிட்டவற்றுடன் இணைந்து காஸாவில் அமைதி திரும்ப முயற்சிக்க வேண்டும்.மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும். உலக அமைதி, மனித உரிமைகள் அனைவருக்கும் பொதுவானது.

அதனை காக்க வேண்டும். இந்த மோசமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் வழங்க வேண்டும். பாலஸ்தீனியர்களின் மறுவாழ்வு திட்டம் என்பது காஸாவை மீண்டும் கட்டமைப்பது. அனைத்து பிணையக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் பேசுகையில், வரும் 14ஆம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இதில் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போரை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இது தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புவதாக  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *