
“அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன், ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இதுவரை இல்லாத வகையில் குண்டுகளை ஈரான் மீது வீசுவோம்” என்று ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சமீப காலமாகவே அமெரிக்கா அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகளை மிரட்டியும் , வரி சுமையை அவர்கள் மேல் விதித்தும் வருகிறார். அமெரிக்கா – ஈரான் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே ஈரான் அணுசக்தி திட்டத்தின் மூலம் அணு ஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
இதனை எதிர்க்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது. அணுசக்தி திட்டத்தில் ஒரு ஒழுங்கு முறை வேண்டும் என்றும் கூறி வருகிறார்.அணுசக்தி திட்டம் மூலம் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் வகையில் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ட்ரம்ப் முடிவு செய்து ஈரான் உயர்மட்டக் குழுவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் ஈரான் அந்த கடிதத்தை ஏற்கவில்லை.
“ஈரான் எங்களின் டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது குண்டுமழை பொழிவோம்.இந்த சம்பவம் இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் இருக்கும். அணு ஆயுத ஒப்பந்ததிற்கு தயாராக வில்லை என்றால் ஈரான் கடும் பொருளாதார தடைகளைச் சந்திக்கும்” என்று கூறியிருக்கிறார்.இது தற்போது ஈரான் அதிபர் மற்றும் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

