
மத்தியக் கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் லராக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்க ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் பணியில் ஈரான் படைகள் ஈடுபட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலடியாகத் தற்போது ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன், அல் அஸ்ராக் ஆகிய அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அவற்றில் எட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டானியப் படைகள் தெரிவித்தன.
ஈரான் பார்லிமென்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராகிம் அஜிஜி, லராக் தீவில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.



