
இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல்பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பதிலடி தருவது பற்றி இன்னும் முடிவு செய்யாமல் உள்ளது. அவர்களுடைய இடத்தில் நான் இருந்திருந்தேன் என்றால், எண்ணெய் வயல்களைத் தாக்குவதற்கு பதிலாக, வேறு இலக்குகளைக் குறிவைப்பது பற்றிப் பரிசீலனை செய்திருப்பேன் என்றார்.
இஸ்ரேல், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் எல்லா உரிமையும் உள்ளது என்று அதற்கு ஆதரவாகப் பேசிய பைடன், பொதுமக்கள் உயிரிழப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவம் பற்றிய எச்சரிக்கையையும் வலியுறுத்தினார். தொடர்ந்து அவர், நான் கூறிய திட்டத்திற்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. இந்த மோதலில் தீர்வு ஏற்பட உலகம் முழுவதும் உள்ள கூட்டணி நாடுகளும் இதனை ஒப்பு கொள்கின்றன.
கொடூர தாக்குதலுக்கு எதிராக, தன்னை பாதுகாத்து கொள்ள இஸ்ரேலுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஈரானிடமிருந்து மட்டுமல்ல… ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்தும் கூட என்று அவர் பேசியுள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியில் முழு அளவிலான போர் ஏற்படாமல் தடுப்பது பற்றிய ஆலோசனை முயற்சிகளைப் பற்றிப் பைடன் குறிப்பிடும்போது, நாங்கள் நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில், முதல்கட்ட கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. லெபனானில் உள்ள பிரான்ஸ் அதிகாரிகள் வழியே பதற்றம் ஏற்படாமல் அதனைத் தணிக்கும் வகையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்ளும்போது, சிறந்த தடுப்பு நடவடிக்கையைத் தீர்மானிப்பது என்பது சற்று கடினம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். எனினும், 4 நாட்களில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளில் 250 பேரை ஒழித்து விட்டோம் என்றும் 2 ஆயிரம் பயங்கரவாத இலக்குகள் அழிக்கப்பட்டு விட்டன என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது.

