
அமெரிக்காவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஜோ பைடனிடம் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.
இதனை ஏற்க முடியாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திலேயே அத்துமீறலிலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். இதில் டொனால்டு டிரம்பின் பங்கு உள்ளது என்று கூறப்பட்டது. இது தொடர்பாக கொலராடோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கே தகுதியற்றவர் என்ற தீர்ப்பை அளித்தது.
குடியரசு கட்சிக்கான அதிபர் வேட்பாளர் தேர்வுக்கான வாக்குச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம்பெறக் கூடாது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அது அளித்தது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான பாராளுமன்ற வன்முறை வழக்கில் தீர்ப்பளித்த கொலராடோ மாகாண நீதிமன்றம் அவர் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறியது. மேலும் கொலராடோ மாகாணத்தில் அவருடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் டிரம்ப் பெயர் இடம்பெறாது. அப்படி இடம் பெற்றிருந்தால் வாக்குகள் எண்ணப்படாது என்று தெரிவித்திருந்தது.
கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது டொனால்டு டிரம்ப் அதிபர் ஜோ பைடனை வீழ்த்தும் அளவுக்கு வலுவான நிலையில் உள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டிரம்புக்கு எதிராக கொலோரடோ மற்றும் பிற பல மாகாண நீதிமன்றங்களில் தொடரப்படும் தகுதி நீக்க வழக்குகள் ஜனநாயகத்துக்கு எதிரானவை மற்றும் டிரம்பின் அரசியல் எதிரிகள் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் தடுக்க இதுபோன்ற திட்டமிட்ட சதியை செய்வதாக அவரது ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளை சுற்றி கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


