
தெலங்கானா அருகே கட்டுமானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மொயினாபாத் அருகே இருக்கும் கனகமாமிடி கிராமத்தில் டேபிள் டென்னிஸ் அகாடமியின் உள்விளையாட்டு அரங்கம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இன்றும் வழக்கம்போல் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு 14 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கட்டிடத்தின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு இடையே 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்ட நிலையில் அவர்களில் மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்துபற்றித் தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்துப் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். உள்விளையாட்டு அரங்கம் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

