
புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை ஆதரிக்கும் வகையில், கனடாவில் அதனைச் சித்தரித்து அலங்கார சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அந்நாட்டின் நடவடிக்கைகளால், உறவு பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ப்ளூ ஸ்டார் ஆபரேசன் 40வது ஆண்டுத் தினத்தை முன்னிட்டு கனடாவின் பிராம்ப்டன் நகரில், முன்னாள் பிரதமர் இந்திராவை அவரது பாதுகாவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை சித்தரித்து அலங்கார சிலைகள் வைக்கப்பட்டன. இந்திரா சிலை பின்புறம் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
அதில், 1984 அக்.,31 ல் நடந்ததற்கு வழங்கப்பட்ட தண்டனையெனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்தப் போஸ்டரில், கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் புகைப்படமும் உள்ளது. மேலும், அந்தப் போஸ்டரில் பிரதமர் மோடி புகைப்படத்துடன், தண்டனை காத்திருக்கிறது என்ற வாசகம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கு முன்னர், கடந்த வாரம் வான்கூவர் நகரில் இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின் போதும், இதே போன்று போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாகக் கனடா அரசிடம் தூதரக ரீதியில் புகார் அளிக்கப்பட்டது.
இதற்குக் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியதாவது: வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பொது வெளியில் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது கனடா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனடாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் இத்தகைய வெறுப்பு பிரசாரத்தினால், அச்சுறுத்தப்படுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாகக் கனடாவில் இந்த நிகழ்வு மீண்டும், மீண்டும் நடக்கிறது. இதனைத் தடுக்க கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கனடாவிற்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், வன்முறையை ஆதரிப்பவர்களுக்கும் , இங்குக் கொடுக்கப்படும் ஆதரவு பற்றிப் பெரிய பிரச்னை உள்ளதாகக் கருதுகிறேன். இது இந்தியா – கனடா உறவுக்கு நல்லது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவிற்கான கனடாவின் தூதர் கேமரூன் மெக்கே கூறுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை ஆதரித்து நடந்த நிகழ்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது. பிரிவினைக்கும், வன்முறையைப் புகழ்வதற்கும் கனடாவில் இடம் இல்லை. இந்த நிகழ்வுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் எனக்கூறியுள்ளார்.
