
ரேக்குகளில் உள்ள 354 பெட்டிகளை இணைத்து நாலரைக் கிலோமீட்டர் நீளமுள்ள சரக்கு ரயிலை உருவாக்கி அதனுடன் ஏழு எஞ்சின்களை இணைத்து இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
பொதுவாக ஒரு சரக்கு ரயிலில் 50 பெட்டிகள் வரை இருக்கும். இந்த 50 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் நெடுஞ்சாலைக் கடவில் தாண்டிச் செல்லும்போது அதைக் கடந்து செல்லக் காத்திருப்போர் பொறுமை இழந்து விடுவர்.
இந்நிலையில் பீகாரின் ஹாஜிப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு மத்திய ரயில்வே 59 பெட்டிகளைக் கொண்ட ஆறு சரக்கு ரயில் ரேக்குகளை ஒன்றாக இணைத்துள்ளது.
முதலில் இரண்டு எஞ்சின்கள் இடையிடையே ஒவ்வொன்று என மொத்தம் ஏழு எஞ்சின்களையும் அதனுடன் இணைத்துள்ளது. ஏழு எஞ்சின்கள், 354 பெட்டிகள் கொண்ட இந்த நீண்ட சரக்கு ரயிலின் மொத்த நீளம் நாலரைக் கிலோமீட்டர் ஆகும். இந்த நீண்ட நெடிய சரக்கு ரயிலை உத்தரப் பிரதேசத்தின் கஞ்ச் கவாஜா முதல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்வா ரோடு வரை 200 கிலோமீட்டர் தொலைவுக்கு இயக்கிக் கிழக்கு மத்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
சராசரியாக மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி ஐந்து மணி நேரத்தில் ரயில் சென்றடைந்ததாக ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



