Mallikarjun Kharge:மாநில அந்தஸ்து; ஒரு லட்சம் பேருக்கு வேலை..காங்கிரஸ் வாக்குறுதி!

Advertisements

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு ஓட்டளித்தால் மாநில அந்தஸ்து, ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாக்குறுதிகள் அறிவித்தார்.

ஜம்மு – காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது.

இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில், தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில், 5 தேர்தல் வாக்குறுதிகளைக் கார்கே அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

* காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு ஓட்டளித்தால் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

* பெண் குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

* பெண் தொழில் முனைவோருக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* ஒரு குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உடல்நலக் காப்பீடு வழங்கப்படும்.

* பொது விநியோக முறைமூலம் ஒரு நபருக்கு 11 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.

* மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட காஷ்மீர் பண்டிட் குடியேற்றவாசிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். ஓ.பி.சி., பிரிவினர் அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பெறுவார்கள்.

* காஷ்மீரில் காலியாக உள்ள ஒரு லட்சம் காலியிடங்கள் நிரப்புவோம்.

* சுற்றுலா மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்துவோம். கடந்த பல ஆண்டுகளில் 4,400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் திறப்போம்.

* காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க பாடுபடுவோம். நாங்கள் அதை எப்படிச் செய்வோம் என்று அவர்கள் (பா.ஜ.,) தொடர்ந்து கேட்கிறார்கள்? மக்கள் எங்களுடன் இருக்கும்போது நாங்கள் அதைச் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *