
இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாகப் பாதிக்கப்படவும், ரத்து செய்யப்படவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இது தவிர கனடா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஓமன், நமீபியா, நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினி, நேபாள், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.
நேற்று ஃப்ளோரிடாவில் நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து பரிதாபமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில் தான் இன்று இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான 33ஆவது போட்டி ஃப்ளோரிடாவில் நடைபெற இருக்கிறது. ஃப்ளோரிடாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றைய போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், மைதானத்தில் மழை நீர் தேங்கியபடி இருக்கும் சூழலும் நிலவுகிறது. வடிகால் வசதியும் சரிவர இல்லாததால் மழை நீரை வெளியேற்றுவதற்கு சிரமம் ஏற்படுகிறது. இந்தச் சூழலில் தான் அயர்லாந்து மற்றும் அமெரிக்கா இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த மைதானத்தில் இதுவரையில் நடந்த போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் சராசரியாக 174 ரன்கள் எடுத்துள்ளன.
ஆனால், மழை பெய்த நிலையில் மைதானம் ஈரப்பதமாக இருக்கும் சூழலில் 130 ரன்கள் அடிப்பதே சவால் நிறைந்ததாக உள்ளது. மழையின் காரணமாக மைதானம் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றைய போட்டியிலும் மழை பெய்தால் போட்டியானது கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


