தொழிலதிபர் வீடுகளில் வருமான வரி சோதனை!

Advertisements

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 15 பேர் 6 கார்களில் செந்தில்குமார் வீட்டில் சோதனை நடத்துவற்காக வந்தனர். வீட்டின் பிரதான நுழைவு வாயிலைப் பூட்டிய அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறவும், உள்ளே நுழையும் வெளி நபர்களையும் சோதனையிட்டனர்.

இந்த வீட்டின் அருகில் இருந்த அலுவலகம், விருந்தினர் ஓய்வு இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கனியாவதி ஆகிய குடும்பத்தினர் மட்டும் வீட்டில் இருந்தனர். பள்ளிக்குச் சென்ற செந்தில்குமாரின் மகள் வீட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டார். நேற்று இரவுவரை நடந்த இந்தச் சோதனை இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

இதனால் அவரது வீடு மற்றும் அலுவலகம் முன்பு உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

செந்தில்குமாரின் உறவினர்களான குழந்தைவேல் மற்றும் இவரது தம்பி முருகன் ஆகியோர் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் இவர்களுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க்கும் இயங்கி வருகிறது. இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் குழந்தைவேல், முருகன் ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடை, பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையில் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நடந்த இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். பைனான்ஸ் அதிபர் செந்தில்குமார் பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு உறவினர் என்று கூறப்படும் நிலையில் அவரது வீட்டில் நடந்த இந்தச் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *