Illegal Relationship: பெண் கொலை!

கள்ளக்காதல் பிரச்சனையில் பெண்ணை பனியன் நிறுவன டிரைவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பவளக்கொடி என்கிற சாந்தி (வயது 37). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சாந்திக்கும் அந்த பகுதியை சேர்ந்த கணேசன் (43) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த 2 பேரின் வீட்டினர் கண்டித்தனர்.

இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்தனர். திருப்பூர் கோவில் வழியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். கணேசன் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.

இந்தநிலையில் சாந்தி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார். வெளியூர் செல்லும் கணேசன் போன் பண்ணும் போது சாந்தி எடுக்காமல் இருந்ததுடன், வேறு யாருடனோ பேசி கொண்டு இருந்துள்ளார். இதனால் சாந்தி மீது கணேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் கணேசன் வேலைக்கு சென்றதும் சாந்தி வீட்டில் இருந்து வெளியே சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் சாந்தி வெளியில் எங்கு செல்கிறார் என்பதை கண்டறிய கணேசன் திட்டமிட்டார். அதன்படி நேற்றிரவு வேலைக்கு செல்வதாக கூறிய கணேசன், சாந்தியை நோட்டமிட அங்கு ஒரு இடத்தில் மறைந்து கொண்டார்.

கணேசன் வேலைக்கு சென்றதாக நினைத்து கொண்ட சாந்தி, வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவரை பின்தொடர்ந்து கணேசன் சென்றார். அப்போது சாந்தி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு சென்றதுடன், அங்கு வேறு ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன், சாந்தியிடம் நான் இருக்கும் போது, எப்படி வேறு ஒருவருடன் பழகலாம் என்று தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தியை சரமாரி குத்தினார். இதில் சாந்தியின் தலை, கை, உடல்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடினார். உடனே அங்கு நின்ற பயணிகள் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிய சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்காதல் பிரச்சனையில் பெண்ணை பனியன் நிறுவன டிரைவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *