Hindenburg:அதானி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு: ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு!

Advertisements

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன் பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. ரூ. 10 லட்சம் கோடி வரை பங்கு சந்தையில் அதானி குழுமம் இழப்பை சந்தித்தது. இந்த குற்றச் சாட்டை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்தது.

ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.

இதற்கிடையே ஹிண்டன் பர்க் நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், விரைவில் இந்தியாவில் மிகப்பெரிய சம்பவம் இருக்கு என்று பதிவிட்டது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் மீது ஹிண்டன்பர்க் புதிய குற்றச்சாட்டுகளை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் தான் அறிவித்தப்படி, புதிய குற்றச்சாட்டை வெளியிட்டது. இதில் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவரான தலைவர் மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாக தெரிவித்தது. இதுதொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதானி குழுமம் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டது. ஆனால் அந்த குழுமத்துக்கு எதிராக எந்த பொது நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. தங்கள் நிறுவனங்கள் மீது செபி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது என்ற ரீதியிலேயே அதானி குழும நிர்வாகத்தினர் பதில் அளித்தனர்.

இதற்கு செபியின் தலைவரான மாதபி புச்சுடன் அதானி குழுமத்திற்குத் தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படி மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் கவுதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரிஷஸ் பண்ட் நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.

செபி உறுப்பினர் மாதபி புரி புச், தவால் புச்சு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி சிங்கப்பூரில் உள்ள ஐபிஇ பிளஸ் பண்ட் 1 இல் தங்கள் கணக்கை தொடங்கி உள்ளனர். இந்த கணக்கில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான ஆதாரமாக அவர்கள் சம்பளம் பெற்ற பணத்தை குறிப்பிட்டு உள்ளனர். மேலும் புச்சு தம்பதியின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதபி புச்சு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செபியின் முழுநேர உறுப் பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு சில வாரங்களுக்கு முன்பு 2017-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி, அவரது கணவர் தவால் புச்சு, மொரிஷஸில் உள்ள நிதி நிர்வாக நிறுவனமான டிரைடென்ட் டிரஸ்ட்டுக்கு எழுதிய கடிதத்தில், தனது மற்றும் மனைவியின் ஜாயின்ட் கணக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதன் மூலம் அந்த கணக்கு, தவால் புச்சுவின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்தது. அதன்பின் 2018-ம் ஆண்டு வெளியிட்ட கணக்கு விவரத்தில் புச்சு தம்பதியின் இந்த பண்டில் இருக்கும் பங்கின் மதிப்பு 872,762.25 டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், 2018 பிப்ரவரி 25-ந் தேதி, மாதபி புச்சு செபி-யின் முழுநேர உறுப்பினராக இருந்தபோது, தனது கணவரின் பெயரில் வணிகம் செய்து, தனது தனிப்பட்ட இ-மெயில் மூலம் இந்திய இன்போலைன் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பண்டில் உள்ள பங்குகளை விற்பனை செய்யும்படி கோரியுள்ளார். தான் செபியின் தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு தனது பெயரில் உள்ள பங்குகளை கணவர் பெயருக்கு மாதபி புரி புச் மாற்றியுள்ளார்.

இவர்கள் அதானியின் பங்குகளில் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ளனர். அதானிக்கு சரிவு ஏற்பட்டால் தங்களுக்கும் சரிவு ஏற்படும் என்று செபி அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அதானி மீது செபி நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு அதன் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம்.

அதானி குழுமத்தின் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் யார் என்பது குறித்த விசாரணையில் செபி தோல்வி அடைந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

செபி உண்மையாகவே வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கண்டறிய விரும்பியிருந் தால், அதன் தலைவர்தான் தன்னை முதலில் முன் நிறுத்த வேண்டும். இதனால் அதானி விவகாரத்தில் செபியின் மந்தமான செயல்பாடுகள் ஆச்சரிய மளிக்கவில்லை.

அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஜூன் 27-ந்தேதி செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் நாங்கள் இன்னும் வலுவான வெளிப் பாட்டை வழங்கியிருக்க வேண்டும் என்று கூறியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *