தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Advertisements

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நாளை (நவ. 21) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இதன் காரணமாக வரும் 23-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நாளை முதல் வரும் 24-ம் தேதிவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 25-ம் தேதி கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளையும், தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் வரும் 22-ம் தேதியும், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் வரும் 23-ம் தேதியும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கீ.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *