
வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இண்டர்போலுக்கு வங்கதேச போலீஸ் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் புரட்சியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து தனது பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். மேலும், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக இருந்து வருகிறார். ஷேக் ஹசீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகம்மது யூனுஸ், எப்படியாவது அவரை நாடு கடத்த வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில்தான், வங்கதேசத்தின் விசாரணை முகமையான என்சிபி, ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு இண்டர்போலுக்கு கோரிக்கை விடுத்துள்ளது
ஷேக் ஹசீனா மட்டும் இன்றி மேலும் 12 பேருக்கு எதிராக பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகள், அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை அல்லது விசாரணை அமைப்புகள் கோரிக்கையை ஏற்றே இதுபோன்ற கோரிக்கையை என்சிபி முன்வைக்கும் என்று வங்கதேச உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.
இதை பற்றி அவர் பேசும்போது, ஏற்கனவே நடைபெற்று வரும் விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் இத்தகைய கோரிக்கைகளை வைக்கப்படும். நாடு கடத்துதல் மற்றும் அத்தகைய சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியிருக்கும் நபர்களை கண்டறியவும் அப்போதைக்கு கைது செய்யவும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். நாட்டை விட்டு தப்பி ஓடியவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை கண்டறியும், இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னார் விவரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பகிரப்படும். இதுபோன்ற பணிகளுக்கு இண்டர்போல் உதவும்” என்றார்.



