
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியென மூன்று நதிகள் சங்கமமாகும் இடம் திரிவேணி சங்கமம் – இந்துக்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
மகா கும்பமேளாவின்போது, குறிப்பாக மௌனி அமாவாசை போன்ற சிறப்பு நீராடும் நாட்களில் அதில் நீராடுவது மக்களின் பாவங்களைக் கழுவி, அவர்களுக்கு ‘மோட்சம்’ அல்லது முக்தியை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில், மௌனி அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம் என்று காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறேன்.
கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகள், விஐபிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, நிர்வாகத்தைவிட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவைதான் காரணம்.
பல கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு மோசமான ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாகப் பக்தர்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, மற்றுமோர் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
