
மக்களில் சிலர் தானும் தனது குடும்பமும் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று தன்னலத்துடன் நினைப்பதாக நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
சென்னை போருரில் உள்ள உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல்படும் சிறப்புக் குழந்தைகளுக்கான கல்வி நிலையத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறைச் செயலாளர் மதுமதி, நடிகர் சந்தானம் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர்.
இதில் 8 வயதுக்கு உட்பட்ட அறிவாற்றல் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகள் கொண்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் ஆட்டிசம், வளர்ச்சிக் குறைபாடு, தசை இயக்கப் பாதிப்பு, அறிவுசார் குறைபாடு போன்ற பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் மரம் நடுதல், சிறப்புக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவில் பேசிய நடிகர் சந்தானம், ஒரு சிலர் தானும் தனது குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று தன்னலத்துடன் உள்ளதாகவும், அனைவரும் சமம் என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும் என்றும் தெரிவித்தார்.


