சட்ட பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்!

Advertisements

சென்னை:

தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டசபை கூட்டத்திலிருந்து வெளியேறிய நிலையில் கடந்த ஆண்டு கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் முதல் மற்றும் கடைசி பக்கத்தை வாசித்திருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

தமிழக சட்டசபைக்கான முதல் கூட்டம் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்குச் சட்டசபைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார்.

அவரைத் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றார். அவருக்குக் காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சென்றுவிட்டார். இதனால் பரபரப்பு எழுந்தது. இதுகுறித்து ஆளுநர் மாளிகையும் விளக்கமளித்தது.

அதாவது ஆளுநர் உரையின்போது முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர், சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தாராம். ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் அதிருப்தி அடைந்த ஆளுநர், உரையை வாசிக்கக் கூடச் செய்யாமல் வெளியேறிவிட்டார். இது இவருக்கு முதல் முறையல்ல!

2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 9-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசு தயாரித்து தந்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் ரவி வாசிக்கவில்லை. ‘சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிகணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இந்த அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்களின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் பின்பற்றிப் பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது” என்பன உள்ளிட்ட பகுதிகளை ஆளுநர் ரவி வாசிக்காமல் புறக்கணித்துவிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுபோல் 2024-ம் ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரிலும் ஆளுநர் உரையை முன்வைத்துச் சர்ச்சை வெடித்தது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி 12-ல் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. தமிழ்நாடு சட்டசபை மரபுகளின்படி தமிழ்த் தாய் வாழ்த்துடன் சபை நடவடிக்கைகள் தொடங்கின.

அப்போது, சட்டசபை தொடங்கும் முன்பும் முடிவடையும் போதும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தேன். அது புறக்கணிக்கப்பட்டுவிட்டது; தேசிய கீதத்துக்கு மரியாதை தரவில்லை.

இந்த உரையில் தார்மீக அடிப்படையில் ஏற்க முடியாத பகுதிகள் உள்ளன; அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாகும் எனப் பகிரங்கமாக விமர்சித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இவ்வாறு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஆளுநர் உரை வாசிக்காமல் புறக்கணிக்கப்படுகிறது. எனினும் இன்றைய தினம் ஆளுநர் உரையை வாசிக்காவிட்டாலும் அவர் வாசித்ததாகவே கணக்கில் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *