மாநில நெடுஞ்சாலை ஆணைய மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

Advertisements

சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்து அனுப்பப்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் ஆணைய சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா, கடந்த பிப்.21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகம் செய்தார்.

அதில், நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்த உடனடி, நீ்ண்டகால திட்டம் தயாரித்தல், பன்னாட்டு நிதியைக் கொண்டுவருவதற்கான மாதிரிகளை உருவாக்குவது இந்த ஆணையத்தின் பணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மறுநாள் பிப்.22-ம் தேதி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் நிறுவப்படுகிறது. விரைவில் ஆணையத்துக்கான தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *