Good Friday 2024: நாளை உலகம் முழுவதும் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி!

Advertisements

நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடைபெறஉள்ளது.

சென்னை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளைப் புனித வெள்ளியாகக் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு உயிரைத் துறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தியானிப்பார்கள்.

இயேசு சிலுவையில் உயிரை விடுவதற்கு முன்பு 7 வார்த்தைகளைக் கூறினார். அந்த வார்த்தைகள்குறித்து ஆலயங்களில் தியானிக்கப்படும். அவர் சிலுவையில் முதலாவதாகப் பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே! என்று கூறினார். இவை உள்ளிட்ட 7 வார்த்தைகள்குறித்து தியானிக்கும் மும்மணி தியான ஆராதனை நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது.

கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதேபோலச் சி.எஸ்.ஐ., மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட எல்லா திருச்சபைகளிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம். மும்மணி தியான ஆராதனை முடிந்த பிறகு தான் கிராஸ் பன், மோர் அல்லது கஞ்சி போன்றவற்றை சாப்பிடுவார்கள். முன்னதாக இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. தனது சீடர்களுடன் இயேசு கடைசி இராப்போஜனம் விருந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சியை நினைவுப்படுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இயேசு சிலுவையில் அடித்துக் கொல்லப்படுகிறார். சிலுவையில் உயிரைவிட்ட அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்து வருவதை தான் ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *