சென்னை மெரினா சாலையில் நள்ளிரவில் பரிதாபம்!

Advertisements

சென்னை:

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று நள்ளிரவில் சாலையைக் கடந்த பசு மாட்டின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மாடு மற்றும் மாட்டின் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியும் உயிரிழந்துள்ளன.

மாடுமீது மோதி விபத்துக்குள்ளான கார், மருத்துவத்துறைக்கு சொந்தமான வாகனம் எனவும், மாடு திடீரெனச் சாலையின் குறுக்கே வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பல அசம்பாவித சம்பவங்ங்கள் நடைபெற்று வருகின்றன. சாலைகளில் மாடுகள் சண்டை போடும்போது வாகனங்கள் வந்தால் குறுக்கே சென்று விபத்துகளுக்குக் காரணமாகின்றன. மாடுகள் குறுக்கே வந்ததால் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளன.

மேலும், மாடுகள், நடந்து செல்வோரை முட்டி வீசும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு பள்ளிச் சிறுமி ஒருவரை மாடு தனது கொம்பால் முட்டித் தூக்கி வீசியது. மாடுகளின் கால்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சிறுமியை, இரண்டு மாடுகள் கடுமையாகத் தாக்கின. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அண்மையில் மாடுகள் சாலையில் சுற்றுத் திரிவதை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில், தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து கால்நடை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் நள்ளிரவில் பசு மாட்டின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் திடீரெனப் பசு மாடு குறுக்கே வந்த நிலையில், அதன் மீது கார் மோதியதில் பசு மற்றும் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியும் உயிரிழந்துள்ளன.

பசு மாடு உயிருக்குப் போராடியபோது, அங்கிருந்தவர்கள் கால்நடை மருத்துவமனை உதவி எண்களைக் கூகுளில் தேடி தொடர்பு கொண்டபோது, பல எண்கள் உபயோகத்தில் இல்லையெனப் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *