
பிரபல சீரியல் நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் திரைக் கலைஞர்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான தகவல்களை ஹேமா கமிட்டி அறிக்கை அம்பலப்படுத்தியது. இது மலையாள திரையுலகம் மட்டுமின்றி, அனைத்து மொழி திரைத்துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சிறப்பு புலனாய்வு குழுவைக் கேரள அரசு நியமித்தது.
அந்தக் குழு விசாரணை நடத்தி மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது வழக்கு பதிந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளை நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஒரு பூகம்பம் மலையாள திரையுலகில் வெடித்துள்ளது. திரையுலகினரின் பாலியல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடம், மலையாள சீரியல் நடிகை ஒருவர் பகீர் பாலியல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில் படப்பிடிப்பின்போது சீரியல் நடிகர்களான பிஜூ சோபானம், ஸ்ரீகுமார் ஆகிய இருவரும் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாகப் புகார் தெரிவித்திருக்கிறார். அந்தப் புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் இருவரிடமும் விசாரித்துள்ளனர். அதன்பின் இருவர் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு இன்போ பார்க் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு முதலில் இன்போபார்க் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சம்பவம் நடந்த இடமான திருக்காக்கரா காவல்துறைக்கு மாற்றப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நடிகையைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மற்றவர் சம்பவம்குறித்து வெளியே சொல்ல விடாமல் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பிஜு சோபானம் மற்றும் எஸ்பி ஸ்ரீகுமார் இருவரும் பாலியல் குற்றச்சாட்டுகள்குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் நடிகை சக நடிகர்கள் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


