
பாகிஸ்தான் மண்ணில் இரண்டு பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தானின் தவறான, தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை இந்தியா கண்டித்துள்ளது.
கடந்த ஆண்டு சியால்கோட் மற்றும் ராவல்கோட்டில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை இந்தியா வியாழக்கிழமை மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு சியால்கோட் மற்றும் ராவல்கோட்டில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேற்று தெளிவுபடுத்திய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தானின் சமீபத்திய தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற பொய்யான தகவலை பரப்புவது அடிப்படையற்றது மற்றும் அபத்தமானது” என்று தெரிவித்தார்.
“இந்திய முகவர்கள்” மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் படுகொலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளுக்கு தங்களிடம் “உறுதியான ஆதாரங்கள்” இருப்பதாக பாகிஸ்தான் கூறியதை அடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுச் செயலர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் காசி, பாகிஸ்தானுக்குள் இந்தியா “பிராந்திய மற்றும் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளை” நடத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால், பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் நாடு தாண்டிய சட்டவிரோதமான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மையமாக பாகிஸ்தான் செயல்படுவது நன்கு அறியப்பட்ட ஒன்று என தெரிவித்தார்.
“பயங்கரவாதம் மற்றும் வன்முறையின் சொந்த கலாச்சாரத்தால் மூழ்கடிக்கப்படும் என்று இந்தியாவும் பல நாடுகளும் பாகிஸ்தானை பலமுறை எச்சரித்துள்ளன,” என்று கூறிய ஜெய்ஸ்வால், “பாகிஸ்தான் அதன் செயல்களுக்கு பொறுப்பு. அது தன் தவறுகளுக்காக மற்றவர்களைக் குறை சொல்ல முடியாது. இது சரியான காரணமோ அல்லது தீர்வோ அல்ல” என்று தெரிவித்தார்.


