
80 பவுன் நகையுடன் எஸ்கேப்பான புது மணப்பெண்!
சென்னை திருமணமான 22 நாளில் 80 பவுன் நகையுடன் எஸ்கேப்பான புது மணப்பெண் போலீசார் தேடி வருகிறார்கள்.
தாம்பரம்: சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெருப்பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). விக்னேஷ் சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவருடைய மகள் ஆர்த்தி (வயது 22) என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள ஏ.ஜி.சர்ச் சில் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகும் போதே ஆர்த்தி சேலையூரில் உள்ள உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
விக்னேஷ் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு திருமணத்தின் பொழுது சுமார் 80 சவரன் நகை போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22 நாளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், ஆர்த்தி, கல்லூரியில் முதலாம் ஆண்டுக் கட்டணம் செலுத்தாததால், கல்லூரியில் கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறார்கள் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, வந்து விடுவதாகக் கணவர் விக்னேஷிடம் கூறி கடந்த மூன்றாம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வராததால் கல்லூரியில் போய்த் தேடி உள்ளனர். அங்கேயும் அவர் இல்லாததால் அவருடைய மொபைல் எண்ணிற்கு ஃபோன் செய்து பார்த்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் வீட்டில் வந்து பார்த்தபோது, 80 சவரன் நகையுடன் ஆர்த்தி வெளியேறியது தெரியவந்தது.
இது தொடர்பாகப் பெண் வீட்டிலும் விசாரித்துள்ளனர். இதனை அடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில், விக்னேஷ் புகார் செய்தார். பெண் காணவில்லையென வழக்குப் பதிவு செய்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருமணத்திற்கு முன்பே ஆர்த்தி ஒரகடம் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரைக் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சேந்தமங்கலம் பகுதியில் தாம்பரம் போலீசார் சென்று விசாரணை நடத்தியபோது ஆகாஷின் வீடு பூட்டப்பட்டிருந்தது.
அவரது பெற்றோர்கள் உட்பட அனைவரும் தலைமறைவாகி இருந்தனர். ஆகாஷ் மொபைல் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஆர்த்தியை ஆகாஷ் அழைத்துச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள். புதுமணப்பெண் நகையுடன் மாயமான சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


